1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (20:46 IST)

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசின் பரிந்துரை நிராகரிப்பு - ஆளுநர் தரப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும்  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டது.

ஆளுனர் ஒப்புதல் தாமதமாகி வந்த நிலையில் ஆளுனர் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஆளுனர் தரப்பில் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இன்று நடைபெற்ற ஆளுனர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘எழுவர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ எனக் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 7 பேரின் விடுதலை குறித்து நல்ல முடிவெடுப்பார் எனக் கூறப்பட்ட நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்து  தற்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய குடியரசுத்தலைவருக்கே அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் பதில் மனு ட்  தாக்கல் செய்துள்ளார்.

மேலும், தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.