1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:02 IST)

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது - பேச்சு மாறாத ரஜினி!

தமிழகத்தில் சிறந்த தலைமைக்கான வெற்றிடம் நீடிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர். 
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். 
பேச வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும் போது திருவள்ளுவரை சர்ச்சையாக்குவது அற்பத்தனமாக உள்ளது. திருவள்ளுவர் நாத்திகர் இல்லை, ஆத்திகர். அவரது குறளை பார்த்தாலே இது தெரியும். அதேபோல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என கூறினார். 
 
இதன் பின்னர் செய்தியாளர்கள், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என நினைக்கிறீர்களா? என கேட்டதற்கு தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என கூறினார். அப்போது முதல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக கூறி வரும் அவர் இப்போதும் அதே பேச்சிலேயே நிற்கிறார். 
 
மேலும், அரசியல் கட்சி துவங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள், அரசியலில் இது சகஜம். இந்திய பொருளாதாரம் மந்தமாகதான் உள்ளது; அதை மீட்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.