வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2015 (03:59 IST)

தமிழக சட்ட மன்ற தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி ரயில் மறியல்: தி.வேல்முருகன்

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில், தமிழக சட்ட மன்ற தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி, செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த தீர்மானங்கள் நிறைவேற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த தீர்மானத்தின் எந்த ஒரு வரியையும் மத்திய அரசு மதித்து நடக்கவில்லை. ஆனால், இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, தற்போது கூட, யுத்த கப்பல்களை வழங்கி, தமிழக சட்ட மன்றத்தை அவமதித்துள்ளது.
 
மேலும், தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.