1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜனவரி 2018 (10:48 IST)

முன்னறிவிப்பில்லாத பேருந்து கட்டண உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.

 
இதற்கு முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை ரூ.17-ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  
 
குளிர்சாதன பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து ரூ.42ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளில் ரூ.33-ல் இருந்து ரூ.51ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதீநவீன பேருந்துகளில் ரூ.21-ல் இருந்து ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இந்த கட்டண நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
 
இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அதேபோல், வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமும் இருமடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.