வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (15:54 IST)

வாலிபர் மீதுதான் தவறு - முட்டுக் கொடுக்கும் காவல்துறை

பிரகாஷ் என்ற வாலிபரை மூன்று காவல் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து தாக்கிய விவகாரத்தில் வாலிபர் மீதுதான் தவறு என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 
சென்னை தி.நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கியோடு சென்றுள்ளார். 3 பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும், ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர். அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார். இதில் அவர் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம அடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 
 
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், திருச்சி சம்பவத்திற்கும் பின்பும் போலீசார் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், அவர்கள் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
 
இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்த தமிழக காவல்துறை “ சமூக வலைத்தளங்களில் வெளியானது ஒரு பாதிதான். பிரகாஷ் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார்.  மேலும், போலீசாரோடு வாக்குவாதம் செய்துள்ளார். போலீசாரை தாக்கவும் முயற்சி செய்துள்ளார். அவரை பிடிக்க போலீசார் முயன்ற போது திமிறியுள்ளார்.  அதனால்தான் அவரிடம் போலீசார் அப்படி நடந்து கொள்ள நேரிட்டது. அங்கு நடத்த விஷயங்களை சிசிடிவி கேமராவில் அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதன்பின் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த பின்பே அவர் மீடு நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளனர்.
 
ஆனால், பிரகாஷின் தாயை போலீசார் தாக்கிய பின்பே, அவர் போலீசாரின் சட்டையை பிடித்தார். பிரகாஷின் தாயை தாக்கிய காவல் ஆய்வலர் மீது உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.