1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (13:16 IST)

இந்தியாவின் 2வது தலைநகர் சென்னை: அடுத்த லெவலுக்கு போன விசிக எம்பி!!

இந்தியாவின் 2 ஆவது தலைநகராகச் சென்னை அறிவிக்கப்பட வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 
 
தமிழகத்தின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக இரண்டாம் தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ளதாலும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மதுரை சரியான இடம் என வாதிக்கப்பட்டது.
 
ஆனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரையை 2வது தலைநகரமாக்க விரும்புவது தென்மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை. 2வது தலைநகர் கோரிக்கை குறித்து முதல்வர் முடிவெடுக்கும் வரை எங்களுக்கு இதில் எந்த நிலைப்பாடும் கிடையாது என ஆதரவும் கொடுக்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் 2வதௌ தலைநகர் விவாதம் மீது ஆர்வமற்ற நிலையில் உள்ளார். 
 
இந்நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சிதான் இரண்டாம் தலைநகருக்கான சிறந்த மாவட்டம் என தெரிவித்துள்ளார். திருச்சியில் ஏற்கனவே சென்னைக்கு நிகராக அனைத்து தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார மேம்பாடு கட்டமைப்புகள் உள்ளதால் திருச்சி சரியான இடம் என கூறப்படுகிறது. திமுக பிரமுகர் கே.என்.நேருவும் திருச்சி துணை தலைநகரமாக இருக்க சரியான இடம் என்று கூறியுள்ள நிலையில், இரண்டாவது தலைநகர் எது என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.
 
இதனிடையே தமிழ்நாட்டிற்கே 2 ஆவது தலைநகர் தேவை எனக் கூறும்போது, இந்தியாவின் 2 ஆவது தலைநகராகச் சென்னை அறிவிக்கப்பட வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய பாஜக அரசு புதிய பாராளுமன்றம் கட்டுவதில் முனைப்புக் காட்டி வருகிறது. இந்தியாவில் அப்படி இரண்டாவதாக ஒரு பாராளுமன்றம் கட்ட வேண்டும் என்றால் அதைச் சென்னையில் கட்டுங்கள். குளிர்காலக் கூட்டத்தொடரைச் சென்னையில் நடத்துங்கள் என கூறியுள்ளார். 
 
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் தேவை என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அது திருச்சியா? மதுரையா? என அமைச்சர்களிடையே முரண்பட்ட கருத்து எழுந்துள்ளதால் தமிழக தலைநகருக்கு இன்னும் விடிவு பிறக்காத நிலையில் இந்தியாவின் 2வது தலைநகருக்கு பொருமையாக தான் பிறக்கும்...