1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 மே 2015 (06:57 IST)

கலவரமான ராஜாவின் நிலவரம் - பெரியகுளத்தில் விழுந்த பெரிய இடி

பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த தம்பி ஓ.ராஜா.  இவர், பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு தருணங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருக்கும்.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த மே 23ஆம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழகத்தில் இருந்து குக்கிராமத்தில் இருந்து கூடஅதிமுகவினர் வந்து கலந்து கொண்டனர். ஆனா், ஓ.ராஜா கலந்து கொள்ளவில்லை.
 
ஆனால், அதே நாளில், ஓ.ராஜா தனது 60வது திருமண நாளை, புதுக்கோட்டை திருக்கடையூரில் தனது குடும்பத்தினருடன் சென்று தடபுடலாக கொண்டாடியுள்ளார்.
 
இந்நிலையில், உடனே சென்னைக்கு வருமாறு ஓ.ராஜாவுக்கு  அழைப்பு வந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து ஓ.ராஜாவிடம் இருந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எழுதி வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், ஓ.ராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில்  காவல்துறையினர் ரகசியமாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
ஓ.ராஜாவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பவர்புல் பினாமியாக விளங்கிய அவரது உறவினர்கள் இருவர் வகித்து வந்த அரசு பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்களாம்.
 
அதிமுகவில் பவர்புல் புள்ளியாகவும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வத்தின் இல்ல அரசியல் நிகழ்வுகளை அதிமுகவினர் மட்டும் இன்றி ஓட்டுமொத்த தமிழகமே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.