வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (00:39 IST)

அதிமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா இப்போது திமுகவில்...

அதிமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
 

 
கடந்த 27-01-206 அன்று, ’அதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட, துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக’ தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
 
இதனையடுத்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா அறிவித்திருந்தார். மேலும், அதிமுக அரசுக்கு எதிரான தனது அதிர்ப்தியையும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு நாட்டை சூறையாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இதற்கிடையில், ரோமாபுரி பாண்டியன் தொடர் பாராட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து கருப்பையா திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்.
 
கருணாநிதியின் இந்த அழைப்பை ஏற்ற அவர், ’தான் மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டேன், என்றும் நான் திமுககாரன் தான், இனி திமுகவின் வெற்றிக்காகவும், வளர்ச்சிக்காவும் பாடுபடுவேன்’ என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை கருணாநிதியை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார் பழ.கருப்பையா. இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோதே திமுகவில் இணைய வேண்டும் என்று நினைத்ததாகவும், பின்னர் கட்சியின் தலைவர் கருணாநிதியே தனக்கு அழைப்பு விடுத்ததால் இன்று இணைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.