பாஜக அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம்: ஜவாஹிருல்லா
தமிழக சட்ட மன்ற தேர்தலின் போது, பாஜக அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி என்பது பொது மக்களின் பிரச்சினைகளை அரசிடம் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டது. ஆனால், அது நாளடைவில் அது அரசியல் கூட்டணியாக மாறியது. எனவேதான், அக்கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி வெளியேறியது.
சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என ஜனவரி மாதம் இறுதியில் அறிவிப்போம். பாஜக இடம் பெறாத கூட்டணியில் இடம் பெறுவோம் என்றார்.