1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 2 ஜனவரி 2016 (12:47 IST)

ஒருதலைக் காதல்: 10 ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்துக் கொலை

திருப்பூர் அருகே ஒருதலைக் காதலால் 10 ஆம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.


 

 
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒருதலைக் காதலால் 10 ஆம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 
 
மேலும், அந்த வாலிபரும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
 
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
 
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் - லட்சுமி தம்பதி விவசாய கூலித்தொழிலாளர்களான, இவர்களுடைய மகள் பூரணி
 
16 வயதுடைய பூமணி குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
பூமணியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வண்ணாரை - செல்லம்மாள் தமபதியினரின் மகன் ஆனந்தன் வண்ணாரையும், அமல்ராஜூம் உறவினர்கள். 23 வயதுடைய ஆனந்தன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
 
கடந்த 2 வருடங்களாக ஆனந்தன், பூரணியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பூரணியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஆனந்தன் பக்கத்து வீட்டிலேயே வசிப்பதால் தினம், தினம் சந்திக்கும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக பூரணியை குன்னத்தூர் அருகே ஆயிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள அவளுடைய பாட்டி வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்து பூரணி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் புத்தாண்டையொட்டி தனது பெற்றோரை பார்ப்பதற்காக பூரணி, நல்லிக்கவுண்டன் பாளையத்துக்கு வந்தார்.
 
பூரணி நள்ளிரவில் வீட்டிற்கு அருகேயுள்ள தெருவில் பொதுமக்கள் சார்பில் நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். வீட்டில் அவருடைய பெற்றோர் தூங்கி விட்டனர்.
 
அப்போது, ஆனந்தன் பூரணியிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. பின்னர் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து நள்ளிரவில் பூரணி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆனந்தன் அவளை பின்தொடர்ந்து சென்றார்.
 
பூரணி வீட்டிற்கு அருகே சென்றபோது, ஆனந்தன் அவளை வழிமறித்து நிறுத்தி பேசியுள்ளார். அப்போது பூரணிக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
 
அப்போது, கோபம் அடைந்த ஆனந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த பூரணியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் துடிதுடித்தபடி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பூரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து ஆனந்தன், ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நள்ளிரவு வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் குளியல் அறைக்குள் சென்று தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அதே கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டார்.
 
அப்போது, வலியால் துடித்த ஆனந்தனின் சத்தத்தை கேட்ட அவருடைய பெற்றோர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.
 
இப்போது, அங்கு ரத்த வெள்ளத்தில் ஆனந்தன் மயங்கிக்கிடந்தார். இதைத் தொடர்ந்து, அவரை மீட்டு கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில், பூரணியின் தாயார் லட்சுமி, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, தனது மகள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட குன்னத்தூர் காவல்துறையினர் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒருதலைக்காதல் விவகாரத்தில் பூரணியை ஆனந்தன் கழுத்தை அறுத்துக்கொலை செய்தது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, ஆனந்தன் வீட்டு குளியல் அறையில் இருந்து 2 கத்திகள் மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
மேலும், அங்கிருந்து தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும், இந்த விசாரணையில், ஆனந்தனுக்கு, மாணவி பூரணி தங்கை முறை என்று உறவினர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.