வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (08:10 IST)

புதிய தலைமைச் செயலகக் கட்டடம்: ஒரு நபர் விசாரணைக் குழு அழைப்பாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு

புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு தொடர்பாக ஒரு நபர் விசாரணைக் குழு முன் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிர்த்து முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பொதுப் பணித்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
சென்னை ஓமந்தூரார் அரசுத் தோட்டத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது சுமார் ரூ.1,000 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது.
 
ஆனால், 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், அந்தக் கட்டடம் உறுதித்தன்மையற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது.
 
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் செப்டம்பர் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிர்த்து கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தனி நபர் குழு முன்பு ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மு.க ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவருக்கும் தனி நபர் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 
இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தனி நபர் குழுவை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேரில் ஆஜராகுமாறும் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.