1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 8 ஜூன் 2015 (15:36 IST)

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: பொறியாளர் செந்திலுக்கும் கிடைத்தது ஜாமீன்

வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் சிறையில் சிறையில் உள்ள பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
 
நெல்லை வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
 
நெல்லை மாவட்டத்தில், வேளாண் துறையில் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக முதலில் புகார் எழுந்தது.
 
இதை அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேளாண் தலைமைப் பொறியாளர் செந்திலும் மறுத்தனர்.
 
ஆனால், வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தல்தான் காரணம் என கூறி என சிபிசிஐடி காவல்துறையினர்  அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
 
இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.  அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த 2  நாட்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்த நிலையில், தற்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியாளர் செந்திலுக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.