1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (13:23 IST)

தமிழகத்தில் இனி அகதிகள் முகாம் கிடையாது!? – அகதிகள் தினத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற பெயர் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 6.53 கோடி மக்கள் வலுகட்டாயமாக பல்வேறு காரணங்களால் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு, பிறநாட்டு போர்கள், பொருளாதார நெருக்கடி, பஞ்சம், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பலர் அகதிகளாக நாடு நாடாக செல்லும் நிலை உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கான மறுவாழ்வை முன்னிறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 20ம் தேதி “உலக அகதிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக அகதிகள் தினத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், உலக அகதிகள் தினம் #WorldRefugeeDay எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு.

உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.