1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VINOTH
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (10:28 IST)

காணாமல் போன பெண் காவல்நிலையத்தில் காதலனுடன் தஞ்சம்! – கோவையில் பரபரப்பு!

கோவையில் பெண் காணாமல் போன சம்பவம். கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் சிதம்பரத்தில் காதலுடன் பெண் தஞ்சம் அடைந்ததாக தகவல். பெண்ணை தங்களுடன் பேச வைக்ககோரி சிதம்பரம் காவல் நிலையம் முன்பு பெண்ணின் பெற்றோர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


 
கோவை மாவட்டம் மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர்உசேன் (54). இவரது மகள் சுமய்யா (18). இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு ஹாட் சிப்ஸ் ஓட்டலில் கேஷியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சென்ற சுமய்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் கடைக்கு சென்று பார்த்தபோது உங்கள் மகள் கடைக்கு வரவில்லை என கூறிவிட்டனர். மேலும் அவர்கள் விசாரணை செய்தபோது சுமையா சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த ஓட்டலில் வேலை செய்த ஒரு வாலிபருடன் சென்று விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜாகிர் உசேன் கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெண் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோவை பகுதியில் இருந்து வந்த சுமய்யா என்ற வாலிபருடன் சிதம்பரம் பகுதியில் இருப்பதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதனால் பெண்ணின் பெற்றோர் மற்றும் உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இன்று இரவு திடீரென சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது போலீசாரிடம் பெண்ணை தங்களிடம் பேச வைக்க வேண்டும் என கூறினர். ஆனால் இரவு நேரம் என்பதால் அதைச் செய்ய முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிதம்பரம் நகர காவல் நிலையம் எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுமார் 10 நிமிடத்தில் சாலை மறியலை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கஞ்சிதொட்டிமுனை பகுதிக்கு வந்த இஸ்லாமியர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அங்கும் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த சிதம்பரம் போலீஸ் ஏஎஸ்பி ரகுபதி உடனடியாக பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது தந்தையுடன் பேச வைத்தார். அப்போது பெண் சுமய்யா, நாளை காலை காவல் நிலையத்திற்கு வருவதாக தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார் இதனால் சிதம்பரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.