வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:48 IST)

அலங்காநல்லூரில் பாய்ந்த அமைச்சரின் கொம்பன்கள்: அடக்கமுடியாமல் வீரர்கள் தவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெறும். நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேடு பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
 

700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் இந்த விழாவில் 900 வீரர்கள் காளைகளை அடக்க களம் இறங்கியுள்ளனர். அந்த காளைகளில் அதிமுக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும் உள்ளன. சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று கொம்பன்களும் வாசல் திறந்துவிடப்பட்ட நிலையில் ஆவேசமாக சீறி பாய்ந்தது. சீறி பாய்ந்த அமைச்சரின் காளைகளை அடக்க காளையர்கள் முயன்ற போதும் அவர்களை தூக்கி வீசிவிட்டு அலேக்காக தப்பி சென்றன அந்த காளைகள்.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளையும் யாராலும் அடக்க முடியவில்லை. அமைச்சரின் காளைகளை தழுவினால் பெரிய பரிசு கிடைக்கும் என விரும்பிய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.