1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:02 IST)

கிளை செயலாளர் கூட துணை முதல்வர்... செல்லூரார் பேச்சால் ஓபிஎஸ் நிலை என்னவோ?

தமிழனின் பெருமை தெரிய திராவிட இயக்கங்கள் தேவை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு. 

 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியது.
 
இதன் பின்னர் அமைச்சர்களுடன் தனித்தனியே அலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் கூட்டாக இனி இது போன்று கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் தன்னிச்சையான கருத்துக்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு, கூட்டணியே இல்லாமல் வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. திராவிட இயக்கம் இருந்தால் தான் தமிழகம் முன்னேறும். தமிழரின் பெருமை தெரிய திராவிட இயக்கங்கள் தேவை. கிளைச் செயலாளர் கூட துணை முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உள்ளது. 

திமுகவில் அதுபோல கிடையாது. ஸ்டாலின் மகனோ மகளோ கட்சிக்குள் வர மாட்டார்கள் எனக் கூறிவிட்டு தற்போது கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய பூசல் உள்ளது. திமுகவுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆலோசனை சொல்ல ஆள் உள்ளது. ஆனால் அதிமுகவுக்கு மக்கள் ஆலோசனை சொல்ல உள்ளார்கள் என்றார்.