1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (10:09 IST)

விருப்பமனுத் தாக்கலில் சாதி, மதத்துக்கு நோ ! – மக்கள் நீதி மய்யம் அதிரடி

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர்.

கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இப்போது விருப்பமனு விவகாரத்தில் இன்னொருப் புதுமையை செய்துள்ளார் கமல். அதுவென்னவென்றால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்பமனுக்களில் தங்கள் சாதி மற்றும் மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ’கட்சியின் பொறுப்பாளர்களை நியமிக்கும் போதுகூட அந்தந்த வட்டாரங்களில் பெரும்பான்மை சாதி, மதத்தை சேர்ந்தவர்களை மக்கள் நீதி மய்யம் சார்பில் நியமிக்கவில்லை. எனவே விருப்பமனுக்களில் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் தனித் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களின் சாதியைப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.