1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (21:07 IST)

மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகத்திலும் தடை - முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’ இந்தியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாக ஆணையரகம் ‘மேகி நூடுல்ஸ்’ மற்றும் அதை போன்ற இதர ‘நூடுல்ஸ்’ உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
 
சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
 
‘நெஸ்லே’ நிறுவனத்தின் ‘மேகி நூடுல்ஸ்’, 'Wai Wai Xpress Noodles', 'Reliance Select Instant Noodles', 'Smith and Jones Chicken Masala Noodles'' ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம்-ன் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
 
இதனை அறிந்த ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்சொன்ன ‘நூடுல்ஸ்’ உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006,  பிரிவு 30(2)(a)-ன் கீழ் இந்நிறுவனங்கள்  நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார். மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.