1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (13:51 IST)

பாலியல் வழக்கு.! நீதிபதி எச்சரிக்கைக்கு பணிந்த ராஜேஷ் தாஸ்..!!

rajesh das
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வருகிற 31 ஆம் தேதி இறுதி வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
 
இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  
 
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இதனையடுத்து ராஜேஸ்தாஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.
 
இதனிடையே கடந்த புதன்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வருகிற 29ஆம் தேதி (இன்று) ராஜேஷ் தாஸ் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பூர்ணிமா எச்சரித்து இருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில்  ஆஜரானார்.


ஜனவரி 31ஆம் தேதி ராஜேஷ் தாஸ் தரப்பினர் இறுதி வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.