செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (05:02 IST)

தேவர் ஜெயந்தி போல், தமிழகத்தில் காமராஜர் ஜெயந்தி விழா

ஜீலை 15ஆம் தேதி தமிழகத்தில் காமராஜர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது என்றும், அந்த விழாவில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் தென் மாவட்ட நாடார் தொழில் அதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் கரிகோல்ராஜ் தலைமையில் ஒன்று கூடி ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தினர்.
 
அப்போது, தேவர் ஜெயந்தி பிறந்த தினவிழாவில் அனைத்து தலைவர்களும் தேவர் பிறந்ததினத்தில் அவரது நினைவு இல்லத்துக்குச் சென்று சிறப்புச் செய்வது போல், இந்த ஆண்டு முதல் காமராஜ் பிறந்த நாள் தினவிழாவுக்குப் பதில் காமராஜர் ஜெயந்தியாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முழுப் பொறுப்பையும் கரிக்கோல் ராஜ் வசதம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதனையடுத்து, டெல்லி சென்ற கரிக்கோல்ராஜ் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணனுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விருதுநகரில் காமராஜ் ஜெயந்திக்கு அழைப்பு விடுத்தார்.
 
அப்போது, அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், இந்ந முறை பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ஜீலை 15ஆம் தேதிக்கு அனுப்பிவைப்பதாகவும், அடுத்த முறைகளில் நானே நேரில் வருகிறேன் என உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், தமிழகத்தில் காமராஜர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்தும், கடிதம் வாயிலாகவும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதனால், முதல் முறையாக நடைபெற உள்ள காமராஜர் ஜெயந்தியை வெற்றிகரமாக நடத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளது.