1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (17:12 IST)

காவிரி நீர் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த நிலை என்ன? : கருணாநிதி கேள்வி

தமிழக்திற்கு, கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசு அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதி மன்றத்திலே முறையிட்டு, அதன் பிறகே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது. 
 
இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், அதற்கான தண்ணீர் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி, வேதனையடைந்து வருகிறார்கள். 
 
ஜுன், ஜுலை, ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை காவேரியில் உடனடியாக வழங்கிட, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களும், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் இந்த வழக்கில் வாதிட்டார்கள். 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் கூறும்போது, சட்டத்திற்கு அப்பாற்பட்டு, கர்நாடக அரசு, மனிதாபி மானத்தோடு அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங் களுக்கிடையில் சுமூகமான ஒரு சூழல் நிலவ வேண்டுமென்றும், நடுவர் மன்றத் தீர்ப்பில் எந்தெந்த நேரங்களில் எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், அந்த அடிப்படையில் தற்போது உள்ள தண்ணீர் இருப்பில் எவ்வளவு நீரை தமிழகத்திற்கு வழங்க முடியும் என்பது குறித்து மாநில அரசிடம் கலந்தாலோசித்து நீதி மன்றத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கினை 5-9-2016க்கு ஒத்தி வைத்திருந்தார்கள்.
 
5ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டும் கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவு குறைந்துள்ளது என்றும், கர்நாடக விவசாயிகளுக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் வாதிட்டிருக்கிறார். தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிடும்போது, தமிழக விவசாயிகள் ஏற்கனவே குறுவைச் சாகுபடியை இழந்து பெரும் நட்டத்தில் உள்ளனர். 
 
சம்பா பயிரையாவது காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் எங்களுக்கு 40 டி.எம்.சி. தண்ணீராவது தர வேண்டும். அப்போது தான் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சம்பா சாகுபடியும் அழிந்து விடும் என்றெல்லாம் வாதிட்டிருக்கிறார். 
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதி மன்ற நீதிபதிகள் “சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் நலன் கருதி தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம். கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட் களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறி, விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 
 
வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு நிச்சயமாகச் சம்பாவுக்கு போதுமானதல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கூடுதல் தண்ணீர் தரக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். 
 
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட காவேரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமி மலை சுந்தர விமல்நாதன், காவேரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி. நடராசன், தமிழக ஏரி மற்றம் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவ நாதன், த.மா.கா. விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் “ஒரு கணக்கும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பத்து நாளைக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்று உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. 
 
எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு குழுவை அமைத்து, பிரதமரை நேரில் சந்தித்து கர் நாடகத்திலிருந்து நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் பெற வேண்டும் என்றும், மறு சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்து கூடுதல் தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
 
நேற்றையதினம் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தில், “நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை  அணுகலாம். கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள். 
 
உச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவின்படி 13 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழகத்திற்குக் கிடைக்கும். ஆனால் 25 இலட்சம் ஏக்கரில் முழுமையாக சாகுபடி செய்ய தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்குப் பின், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அவர்கள் கூறுகையில், “குடிநீருக்கே இல்லை என்கிற போது, எப்படி தினமும் இவ்வளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட முடியும்? கண்டிப்பாக முடியாது;
தண்ணீர் திறந்து விடுவதை நாங்கள் நடைமுறைப்படுத்த முடியாது.. நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக் கிறேன். அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும்” என்று தெரிவித்திருக்கிறார். உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரத்தில் அந்த மாநில முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
 
உச்ச நீதி மன்றம், இறுதித் தீர்ப்பைக் கூட அல்ல, இடையில் ஒரு கருத்தைத் தெரிவித்த உடனேயே கர்நாடக மாநில முதலமைச்சர் செய்தியாளர் களிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாகவும், அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழக அரசின் சார்பில் முக்கியமான இந்தப் பிரச்சினையில் மிகவும் தேவையான இந்த நேரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்காமல் இருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 
ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போவதாகவும் தெரியவில்லை. அவரைப் பொறுத்த வரையில் விவசாயிகளின் குறுவை - சம்பா சாகுபடி பற்றியெல்லாம் என்ன கவலை? மேலும் தமிழக அரசின் சார்பில் அடுத்து என்ன தான் செய்யப் போகிறார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. கேட்டால், “நான் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டேன், நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டேன், அத்துடன் என் வேலை முடிந்து விட்டது” என்று சொல்லிக் கை கழுவி விடுவார்கள். 
 
உண்மையில் பிரச்சினை தீர்வதற்கு என்ன தான் வழி, என்ன செய்யப் போகிறார்கள், விவசாயிகளின் பிரச்சினை தீருமா? தீராதா? காவேரியில் தற்போது உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள 13 டி.எம்.சி. தண்ணீர் என்பது போதவே போதாது என்பது அனைவருக்கும் தெரியும். 
 
அதைப் பற்றி என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? விவசாயிகள் சங்கத்தினர் கேட்பதைப் போல சீராய்வு மனு போடப் போகிறார்களா? சீராய்வு மனு போட்டு, காவேரி கண்காணிப்புக் குழுவால் எவ்விதப் பயனும் இல்லை என்பதால், 13-5-2013க்குள் அமைத்திருக்க வேண்டிய காவேரி மேலாண்மை வாரியத்தையும் - காவேரி ஒழுங்காற்றுக் குழுவையும் மூன்றாண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இப்போதாவது அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தமான உத்தரவைப் பெறப் போகிறார்களா? குறைந்த பட்சம் 50 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவைப் பெறப் போகிறார்களா? அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்யப் போகிறார்களா? அல்லது பிரதமரிடம் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப் போகிறார்களா என்பதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? அந்தப் பதிலைத் தான் இன்று நாடே எதிர்பார்க்கிறது!

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.