வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (11:12 IST)

பிக்பாஸ் ; வீட்டிற்கு போகாத கஞ்சா கருப்பு - ஏமாற்றுகிறதா விஜய் டிவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது போல் காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.


 

 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, வெளியேற்றப்படும் பட்டியலில் கஞ்சா கருப்பு, ஓவியா, பரணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். உடனே எழுந்த கஞ்சா கருப்பு மற்ற போட்டியாளர்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு ஓவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பினார் கஞ்சா கருப்பு. மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த  நாட்களில் ஆராரிடம் சமையலும், கணேஷிடம் இருந்து யோகாவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதன் பின்பு வெளியே வந்த அவர் கமல்ஹாசனிடம் தனது பிக்பாஸ் அனுபவத்தையும் பகிருந்து கொண்டார்.
 
இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும், வீட்டிற்கு செல்ல அவரை விஜய் தொலைக்காட்சி அனுமதிக்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியே கசிந்துள்ளது. பிரபல வார இதழ் ஒன்று தொலைபேசி வழியாக கஞ்சா கருப்புவிடம் பேசிய போது, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், வீட்டிற்கு செல்ல தனக்கு அனுமதியில்லை என்றும், தனக்கு ஒரு பிரத்யோக அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதில்தான் தான் தங்கி இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சி முழுவதுமாக அதாவது 100 நாட்கள் முடிந்த பின்பே தான் வீட்டிற்கு செல்லவிருப்பதாகவும், விஜய் டிவியிடம் தான் இட்ட ஒப்பந்தப்படி பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என கூறிய அவர் மேலும் தொடர்ந்து பேச மறுத்து விட்டார்.
 
அப்படியெனில், வெளியேற்றம் என்பது வெறும் கண் துடைப்புதானா? எதற்காக கஞ்சா கருப்பு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.