கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!
மகா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் மக்களின் எண்ணிக்கை 55 கோடியை தாண்டிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வு, பக்தர்களின் அதிக கூட்டம் காரணமாக நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மார்ச் மாதம் வரை நீட்டிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர், "மகா கும்பமேளா நீட்டிக்கும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கும்பமேளா நல்ல நாளில் தொடங்கி, நல்ல நாளில் முடிப்பதற்காகவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எனவே, பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவடையும், அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பக்தர்களுக்காக சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்றும், நெரிசல் இல்லாமல் புனித நீராட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran