1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (12:45 IST)

ஆயுதம் இல்லாமல் போருக்கு அனுப்புவது நியாயமா? அரசுக்கு கமல் கேள்வி!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதுமான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். ” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் தற்போது தேவையான அளவுக்கு முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.