1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (12:11 IST)

மாணவி லாவண்யா மரணத்திற்கு பொறுப்பேற்பது யார்? – கமல்ஹாசன் கேள்வி!

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பொறுப்பேற்பது யார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி இறந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ள நிலையில் பாஜகவினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “சிறுமி இறந்ததற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கதானே தவிர, கழிவறைகளை சுத்தம் செய்யவோ, மத அறிவை பெறுவதற்கோ அல்ல” என கூறியுள்ளார்.

”மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கான காரணத்தை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.