வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 மே 2020 (10:37 IST)

இனி ’அம்மா’வின் பிள்ளை வேஷம் செட் ஆகாது : ஆளும் கட்சி vs கமல்!!

டாஸ்மாக் திறக்கும் விஷயத்தில் துவக்கம் முதலே ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன். 
 
தமிழகத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக்குகளை மூட உத்தரவிட்டது. 
 
இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு தடைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் மதுக்கடைகள் மேலும் சில புதிய விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. 
 
டாஸ்மாக் விஷயத்தில் துவக்கம் முதலே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த கமல் கடைசியாக இனி நீங்கள் அம்மாவின் பிள்ளைகள் என வேஷம் போட முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இது வரை அரசுக்கு எதிராக அவர் பேசியது பின்வருமாறு... 
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. 
 
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
 
மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.