வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (16:05 IST)

கோர்ட்டுக்கு லுங்கி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே? - போலீசாரை கடிந்த நீதிபதி

விசாரணையின்போது சாதாரண உடையில் காவல் துறையினர் வந்ததை அடுத்து நீதிபதிகள், ’கோர்ட்டில் ஆஜராவதற்கு லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் சங்கிலி, கயிறு கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
 

 
வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானதை அடுத்து, அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.
 
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தனிப்படை போலீசார் நடத்தும் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ’மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்கள் ஆகியும், விசாரணையில் முன்னேற்றம் இல்லை. வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும், ’இதுவரை நடந்துள்ள விசாரணையின் விவரங்களை கொண்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதில் காவல் துறையினர் சரிவர இந்த வழக்கை விசாரிக்க வில்லை என தெரியவந்தால், வழக்கை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.
 
லுங்கி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே?:
 
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு காவல் துறை அதிகாரிகள் சீருடை அணியாமல், சாதாரண உடையில் வந்திருந்தனர்.
 
இதை பார்த்த நீதிபதிகள், ‘நீதிமன்றத்திற்கு வரும்போது முழுமையான சீருடையில் இருக்கவேண்டும். சாதாரண உடையில் ஆஜராவதற்கு பதில், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் சங்கிலி, கயிறு கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே?’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.