1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2016 (11:33 IST)

ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறார்; செய்தித்தாள்களை படிக்கிறார்: செய்தித்தொடர்பாளர் உறுதி

ஜெயலலிதா நலமோடு இருக்கிறார், சுயநினைவோடு இருக்கிறார். எல்லா செய்தித்தாள்களையும் படிக்கிறார் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


 

கடந்த இரண்டு மாத காலங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சனிக்கிழமை அன்று [19-11-16] சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதனால், பெருமகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா பொதுச்சிறப்பு பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், "முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருக்கிறார், சுயநினைவோடு இருக்கிறார்.

எல்லா செய்தித்தாள்களையும் படிக்கிறார், இப்போது சிறப்பு பொதுவார்டில் இருக்கிறார், வெகு விரைவில் மருத்துவமனையில் இருந்து கோட்டைக்கு வருவார். கோப்புகளை பார்ப்பார், அந்த திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.