வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (15:48 IST)

கொள்ளையர்களை பிடிக்கும்போது இறந்த ஏட்டுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பார்வதி (28). சம்பவத்தன்று பார்வதி பள்ளி முடித்து வண்டியில் திரும்பியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்தது.
 
பின்பு, பார்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை அந்த கும்பல் பறித்தது. பார்வதி, கூச்சலிட மர்ம நபர்கள் பார்வதியை வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியது. அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த பார்வதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஓசூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் ஓசூர் சாலையில் சாதாரண உடையில் கொள்ளையர்களை தேடிச்சென்றனர்.
 
அப்போது 3 பேர் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியில் இருந்து ஓசூர் சென்றனர். இதை பார்த்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்தனர்.
 
இதை பார்த்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஓட்டம் பிடித்தனர். காவல் துறையினரும் தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றனர்.
 
ஒரு கட்டத்தில், சிறிது ஓடிய பின்னர் அந்த மர்ம நபர்கள் எஸ்.ஜ. நாகராஜ், ஏட்டுகள் தனபால், முனுசாமி ஆகிய 3 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நாகராஜ் மற்றும் முனுசாமிக்கு அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
 
ஆனாலும் தொடர்ந்து போராடிய காவலர்கள் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த காவலர்கள் 3 பேரையும் மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஏட்டு முனுசாமி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
 
இந்நிலையில், கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், முனுசாமியின் மகள் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார்.