1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (16:24 IST)

100% இருக்கை அனுமதிக்கு கண்டனம் தெரிவித்த முதல் அரசியல்வாதி!

100% இருக்கை அனுமதிக்கு கண்டனம் தெரிவித்த முதல் அரசியல்வாதி!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய படங்கள் வரவிருக்கும் நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர் 
 
இதுகுறித்து நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு அரசியல்வாதி கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களின் பகையை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் எந்த அரசியல்வாதியும் வாயைத் திறக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லாஹ் இதுகுறித்து தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:
 
கொரோனாவை பரப்பும் வல்லமையுடைய குளிரூட்டப்பட்ட திரையரங்குகளை 100% நிரப்ப அனுமதித்துள்ள தமிழக அரசின் முடிவு மக்கள் நலன் சார்ந்தது அல்ல. முன்களப்பணியாளர்களின் தொண்டை அலட்சியப்படுத்தும் விபரீத முடிவு. உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.