1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (13:30 IST)

ரூம் போட்டு ஜாலியா இருக்கலாம்.. உல்லாசத்திற்கு அழைத்த பெண்கள்! பணத்தை இழந்த விவசாயி!

திண்டுக்கலில் போன் போட்டு உல்லாசமாக இருக்க அழைத்த பெண்ணை நம்பி சென்ற விவசாயி பணத்தை இழந்த சம்பவம் நடந்துள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயது விவசாயி ஒருவருக்கு, சில காலம் முன்னதாக சின்னாளப்பட்டியை சேர்ந்த பவித்ரா என்ற 24 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. செல்போன் மூலமாக விவசாயியிடம் பேசிய பவித்ரா தான் கணவரை இழந்து வாழ்வதாக சொல்லி விவசாயிக்கு தூண்டில் போட்டுள்ளார்.

அதை நம்பி விவசாயியும் பவித்ராவுடன் பேசிவர இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பவித்ரா விவசாயியை உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை சொல்லி அழைத்துள்ளார். பழனியில் ரூம் போட்டு உல்லாசமாக இருக்கலாம் என பவித்ரா சொல்லியுள்ளார். விவசாயியும் அதற்கு ஆசைப்பட்டு பவித்ரா சொன்னபடி பழனியில் உள்ள விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு பவித்ராவுடன் காமாட்சி என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளார். பின்னர் இருவரும் விவசாயியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த அறைக்குள் நுழைந்த 3 ஆண் நபர்கள் விவசாயி உல்லாசமாக இருந்த நிலையில் வீடியோ எடுத்ததுடன் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துள்ளனர்.


உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த விவசாயி அதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். ஆனாலும் அதற்கு பிறகு விவசாயிக்கு போன் செய்த அந்த கும்பல், அவரது உல்லாச வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், பணம் தராவிட்டால் அதை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் விவசாயி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அதன்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அந்த கும்பல் பழனியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி அங்கு விரைந்த போலீஸார் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும், மூன்று ஆண்களையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் இதுபோல பலரை உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K