1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 17 மே 2023 (15:09 IST)

திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்கிறது- அண்ணாமலை

திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா, ‘அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும்’ என உத்தரவிட்ட நிலையில், காவல்துறை முன்னிலையில் அவரை  சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?

திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?

உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.