1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (15:52 IST)

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!

edapadi
தமிழ்நாட்டில் உள்ள 5  சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கழகக் கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.