1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:52 IST)

நத்தம் மேம்பாலம் திறப்பு- பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக பயணம்!

மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
 
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் - ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
 
இந்த பறக்கும் பாலத்தின் அடியில் 150 அடி இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்களின் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் 'கான்கிரீட் கர்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மதுரையில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் பயணத் தொலைவை குறைக்கும் வகையிலும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். இதே போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோர்பயண நேரம் 1 மணி நேரம் குறையும்.

இந்த நிலையில் நத்தம் பறக்கும் மேம்பாலத்தை இன்று மாலை சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்தப் பாலத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கார் இருசக்கர வாகனத்தில் ஆரவாரமாக உற்சாகமாக இன்று பயணம் செய்தனர் இதையொட்டி வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இந்தப் பாலம் தமிழகத் திலேயே மிக நீண்ட பாலமாக கட்டப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.