1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (13:54 IST)

இளம்பெண்ணுடன் முதியவருக்கு கள்ளக்காதல்: தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி, உதை

சென்னையில், கள்ளக்காதலியுடன் சேர்ந்து என்னுடைய கணவர் கொடுமை படுத்துவதாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.


 
 
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் மாதவமோகன் (வயது 67). என்ற முதியவர் மீது அவரது மனைவி ஆனந்தி (58) சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில், என்னுடைய கணவருக்கும் புதுப்பேட்டையைச் சேர்ந்த ராணிக்கும்(32) நீண்ட நாட்களாக கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதை சில நாட்களுக்கு முன்பு நேரில் பார்த்தேன், இதை என் கணவரிடம் தட்டிக் கேட்டேன். அப்போது, எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது,

மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். மேலும், என்னுடைய விரல் மற்றும் தோள்பட்டை எலும்பை உடைத்துள்ளனர். இதனால், இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 
 
இந்த புகாரின் பேரில் அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலி ராணி மீது போலீசார் சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். 
 
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதவமோகனும், ராணியும் மனு தாக்கல் செய்தனர். இவர்களது முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாலும் மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பரிசீலிணையில் இருப்பதால் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது. என்று உத்தரவிட்டு, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தார்.