1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:43 IST)

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.! வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.!! எடப்பாடி பழனிச்சாமி..!!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வேட்பாளர்களை யாரை நிறுத்துவது குறித்த பட்டியலை வழங்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். 
 
மக்களவை தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக தரப்பில் ஏற்கனவே பூத் கமிட்டி அமைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. 
 
பூத் கமிட்டிக்கான காலக்கெடு முடிந்த நிலையில், இன்றைய தினத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்தும், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பொதுத்தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி அமைப்போம் என்றார்.
 
கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்றும் தேர்தல் கூட்டணி முடிவானதும் அதிமுக வேடர்பாளர்களை இறுதி செய்யலாம் என்றும் எடப்பாடி  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.