வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2015 (11:43 IST)

சினிமாவில் மட்டுமே நடிப்பேன். அரசியலில் நடிக்கத் தெரியாது: விஜயகாந்த்

எனக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியும். மக்கள் முன் நடித்து பழக்கமில்லை. மக்களே எனக்கு முதலாளிகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன்  தேமுதிக.வில் இணையும் விழா நேற்று(ஞாயிறு) தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்  “ தருமபுரியில் தொழில் வளம் இல்லாததால் இங்கிருப்பவர்கள் பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். தேமுதிக ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்துவோம். தர்மபுரி மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். 
 
கலைஞர் கருணாநிதியை அவர் வயது காரணமாக நான் விமர்சிக்க விரும்பவில்லை. நான் சினிமாவில் மட்டுமே நடித்துப் பழக்கப்பட்டவன். மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்களே எனக்கு முதலாளிகள். மக்களுக்காக நான் கூட்டங்களில் பேசினால் என் மீது அவதூறு வழக்குப் போடுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை. 
 
எங்கள் கட்சியில் ஜாதி, மதம் இல்லை. எங்கள் கட்சியில் இணைந்தவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்போம்” என்று பேசினார்.