1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:10 IST)

நலமாக இருக்கிறேன்; விரைவில் வீடு திரும்புவேன் : வாட்ஸ் அப்பில் கமல்ஹாசன் தகவல்

தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் எழுந்து நடந்து வருவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் வாட்ஸ் அப் மூலம் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
நடிகர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அவர், பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
 
இந்நிலையில், கமல்ஹாசன் வாட்ஸ் மூலம் ஒரு செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் தன்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்து கொள்கிறார்கள் என்றும், விரைவில் குணமாகி வீடு திரும்பேன் என்றும் கூறியுள்ளார். 


 

 
மேலும், “எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் என் ரசிகர்களுக்கு கூற நான் கடைமைப் பட்டிருக்கிறேன். வெற்றிகளும் விபத்துகளும் எனக்கு புதிதல்ல.. பட வேலைகள் நிறைய இருக்கும் போது, இப்படி நடந்திருக்க கூடாதுதான். ஆனால், பல விபத்துக்கள் நடந்தும் பாடம் கற்க மறந்ததற்கு இந்த விபத்து ஒரு சான்று. 
 
எப்போ திரும்பி வருவீங்க.. எப்ப நடப்பீங்க.. என்று கேட்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் சகோதரனுக்கு, என்னவாயிற்று என் தலைவனுக்கு.. அப்பனுக்கு.. என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் அன்புக்கு நான் எந்த தவமும் செய்யவில்லை.
 
இந்த கடிதத்தை எழுந்து அமர்ந்து நானே எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லுவேன்” என்று அந்த ஆடியோ செய்தியில் அவர் கூறியுள்ளார்.