கடலூரில் மீண்டும் கனமழை எச்சரிக்கை : ராணுவம் விரைந்தது
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை அடுத்து முன்னேற்பாடாக மீட்பு பணிக்காக இந்திய ராணுவம் அங்கு விரைந்துள்ளது.
சமீபமாக பெய்த கனமழையால் கடலூர் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானதாக தெரிகிறது. நிறைய பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர், போலிசார் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 செ.மீ மழை பெய்துள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளத்தால், அதனை சுற்றியுள்ள கிராமத்திலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடலூரில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.