1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 16 டிசம்பர் 2015 (05:39 IST)

வணிகர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களையும் இழப்பீட்டுப் பட்டியலின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையில் ஏற்படுத்தப்பட்ட கடும் வெள்ள பாதிப்புகளினாலும் கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் பெய்த கன மழையினாலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இயற்கையும், செயற்கையும் இணைந்து ஏற்படுத்திய சீரழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது போலவே வணிகர்களையும் இந்த இழப்பீட்டுப் பட்டியலின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
குறிப்பாக, சிறு வணிகர்கள் தங்களின் கடைகளை தரைத்தளத்தில் தான் அமைத்துள்ளனர். சென்னையின் பல இடங்களிலும் சூழ்ந்த வெள்ளத்தால், கடைகளில் இருந்த பொருட்கள் மொத்தமாக சேதமடைந்துவிட்டன.
 
இவ்வாறு, பல வகை வணிகர்களும் இழந்துள்ள பொருட்களின் மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கான இழப்பீடு எதையும் இந்த அரசு அறிவிக்கவில்லை என்பதை வணிகர்கள் மிகுந்த வேதனையுடன் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் கோரிக்கையை இந்த அரசு கவனத்தில் கொண்டு உடனே இழப்பீடு அறிவித்து விரைந்து வழங்க வேண்டும்.
 
மேலும், பாதிக்கப்பட்ட வணிகத்தளங்களுக்கான மின்கட்டணத்தைக் குறைப்பதுடன் அவற்றை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். வணிகர்கள் விற்பனை செய்யும் அத்தியாவசிய பொருட்களான வணிக வரியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும். சேவை வரியும் ரத்து செய்யப்பட வேண்டும். மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
 
மேலும், சுமார் நான்கரை லட்சம் வணிகர்கள் தமிழகம் முழுவதும் பாதிப்படைந்துள்ளனர். அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை வணிக வரியாக செலுத்தி வரும் இவர்களுக்கு உதவ வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
 
எனவே, அரசின் திட்டங்களை நிறைவேற்ற தங்களின் வரி வருவாய் மூலம் உதவியவர்களுக்கு இந்த இடர்பாடான நேரத்தில் அரசு துணை நிற்க வேண்டியது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.