1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Government Plans to Introduce a Unified Auto-Rickshaw App

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

ஆட்டோ
ஆட்டோக்களுக்கு பொதுவான அரசு செயலியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நியமிப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியதாகவும், ஆட்டோ கட்டணம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆட்டோக்களுக்கு அரசே செயலியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆட்டோ ஓட்டுநர்களின் வேண்டுகோளை ஏற்று, செயலியின் தேவை உணர்ந்த காரணத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டத்துறை மற்றும் நிதித்துறையின் ஆலோசனை பெற்ற பிறகு, முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன், ஆட்டோக்களுக்கென புதிய செயலி வடிவமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய ஆட்டோ கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!