ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!
ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால், அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, சமீபத்தில் உயர்நிலை ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சில வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் சான்றிதழ்கள் விதிமுறைப்படி ரத்து செய்யப்படும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் போது காவல்துறை சரிபார்ப்பு அவசியமாக்கப்படும்.
குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து பாடத்திட்டம் சேர்க்கப்படும்.
ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமைந்துள்ளன.
Edited by Siva