வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2016 (17:49 IST)

வாட்ஸ் அப் வாத்தியாரை கைது செய்ய கோரிக்கை - கரூரில் பரபரப்பு

கரூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலரை பற்றியும், அரசுத்தேர்வுகள் இயக்கத்தை பற்றியும் கேவலமாக பேசி அவதூறு பரப்பி வரும் ஒரு ஆசிரியரை கைது செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் புகார் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் மனு கொடுக்கப்பட்டது. 
 
அந்த மனுவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா 14 வகை நலத்திட்டங்களை மாணவர்களுக்கு சிறப்பாக விநியோகம் செய்து அரசுக்கு நற்பெயரை ஈட்டி வரும் வேலையில், கரூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களையும், மற்ற அலுவலர்களையும், மாவட்ட கல்வி அலுவலரை பற்றியும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பரப்பி வருவதோடு, அரசுத்தேர்வுகள் பற்றியும் அவதூறு பரப்பி அவமானபடுத்தி வரும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை சைபர் க்ரைம் நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
 
மேலும், ஜெகதீசன், மாவட்ட கல்வி அலுவலர்களையும், அதிகாரியையும் பற்றி கேவலமாக பேசி வருவதால், பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அப்போது, முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்பிரச்சினையில் துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுப்பதோடு, முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் தக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அலுவலர் கூறினார்.
 
இந்த சம்பவத்தால் கல்வித்துறையினரிடையே சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்