வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (16:23 IST)

ராணுவ வீரர் எனக்கூறி திருமணம் செய்த பரோட்டா மாஸ்டர் : மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை

ராணுவத்தில் வேலை செய்வதாக கூறி வாலிபர் ஒருவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அரக்கோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அரக்கோணத்தில் வசித்துவரும் குமரவேல் என்பவரின் மகள் முத்துலட்சுமி(19). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். அப்போது, ஆற்காடு அடுத்த கரடிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், முத்துலட்சுமியை பெண் பார்க்க வந்துள்ளார். மேலும், அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாக அவரும், அவரின் பெற்றோர்களும் கூற, திருமண ஏற்பாடுகள் நடந்தன.
 
திருமணம் முடிந்த பின், முத்துலட்சுமியின் வீட்டிலியே 3 மாதம் தங்கியுள்ளார் கார்த்திக். அதன் பின் ராணுவ பணிக்காக காஷ்மீர் செல்வதாக முத்துலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ளமுடியாததால் முத்துலட்சுமியும், அவரின் பெற்றோர்களும் சந்தேகம் அடைந்தனர். அதன் பின் அவர் விசாரிக்கும் போது, கார்த்திக் சென்னையில் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருவதும், முத்துலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும், இதற்கு அவரின் பெற்றோர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.


 

 
அதன் பின் தனது கணவரை தொடர்பு கொண்ட முத்துலட்சுமி, நீங்கள் என்ன வேலை செய்தாலும் சரி.. வீட்டிற்கு வாருங்கள்.. நாம் ஒன்றாக இணைந்து வாழ்வோம் என கெஞ்சியுள்ளார். ஆனாலும், கார்த்திக் வரவில்லை எனத்தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கும் பரவ, அது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது.
 
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி விஷம் அருந்தினார். அவரின் பெற்றோர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இதையடுத்து முத்துலட்சுமியின் பெற்றோர்கள் கார்த்திக்கின் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர்.
 
எனவே, முத்துலட்சுமியை ஏமாற்றி திருமனம் செய்து, அவரின் மரணத்திற்கு காரணமான கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.