1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 17 மார்ச் 2016 (19:16 IST)

தமிழகத்தில் இருந்து ரவுடிகள் வெளியேற்றப்படுகிறார்களா?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காவல் துறை டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அதாவது தேர்தல் முடியும் வரை சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்றலாமே? என்று தேர்தல் ஆணையம் யோசனை வழங்கியுள்ளது.
 

 
இதையடுத்து ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ல் தமிழகத்தில் 16,500 பேர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, தற்போது உளவுத்துறை தயாரித்துள்ள ரவுடிகள் பட்டியலில் 20 சதவீதம் பெயர்கள் அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 3,500 பேரும், குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 345 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.
 
இதேபோல் நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் 1,980, மதுரை மாவட்டத்தில் 1,300, கன்னியாகுமரி மாவட்டத்தில் 748, கோவை மாவட்டத்தில் 815, சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 700 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 416 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 475, விருதுநகர் மாவட்டத்தில் 655, தூத்துக்குடி மாவட்டத்தில் 605 பேர் என ரவுடிகள் பட்டியலில் சுமார் 17,350 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 
சமூக விரோதிகள், ரவுடிகள், பிரச்சனையை தூண்டுபவர்கள் என பல்வேறு வகையின் அடிப்படையில் இந்த பட்டியலை உளவுத்துறையினர் தயாரித்து வழங்கியுள்ளனர். எனவே, குற்றப் பின்னணியில் உள்ள இந்த ரவுடிகளை சட்டமன்ற தேர்தலையொட்டி, ஊரை விட்டு வெளியேற்றினால் என்ன? என்று காவல் துறை டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
 
இந்த பரிந்துரையை ஏற்று சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை, ஊரை விட்டு வெளியேற்றலாமா? என்று உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
 
இதில் ரவுடிகள் அனைவரையும் சொந்த ஊரில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக பட்டியலில் உள்ள அனைத்து ரவுடிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் வெளியேறவில்லை என்றால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் 3,500 ரவுடிகளுக்கும் சம்மன் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.
 
அவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் சென்னையை விட்டுஅப்புறப்படுத்தப்பட உள்ளனர். இந்த பணி ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக உள்ள ஜெயக் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
அவர் ரவுடிகளை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இதனால் ரவுடிகள் சொந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர தொடங்கி உள்ளனர்.