வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 23 டிசம்பர் 2015 (11:13 IST)

திருமணமான மகள் வேறொருவருடன் ஓட்டம் : அவமானத்தால் மகள்களை கொன்று பெற்றோரும் தற்கொலை

மகள் ஓட்டம் - பெற்றோர்கள் தற்கொலை

மூத்த மகளின் தவறான நடவடிக்கையால் அவமானம் அடைந்த பெற்றோர்கள், தங்கள் இரண்டு மகளையும் கொன்று விட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.


 
 
வாணியம்பாடியை சேர்ந்த சேகர்(45). இவரின் மனைவி விஜயலட்சுமி(39). இவர்களுக்கு ஸ்ரீநித்யா(22), ரவீணா(20), நிவேதா(17), அனிதா(15) என நான்கு மகள்கள் உண்டு.
 
மூத்தமகள் ஸ்ரீநித்யாவை அவர்களது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அடுத்த மகள் ரவீணா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மற்ற இரண்டு மகள்களும் நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே 12 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
 
இதில் மூத்த மகள் ஸ்ரீநித்யாவிற்கும் ஏமட்டுர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் ஸ்ரீநித்யா அடிக்கடி செல்போனில் பேசுவதை பார்த்த அவர் கணவர் அவரை கண்டித்திருக்கிறார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இந்நிலையில், ஒரு கல்விச் சான்றிதழ் வாங்கும் காரணமாக ஸ்ரீநித்யா, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அங்கே ஒரு இடத்தில் கணவனை அமர வைத்து விட்டு ஒரு வகுப்பறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீநித்யா திரும்பாததால், அவரது கணவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
 
அப்போது ஸ்ரீநித்யா தனது தாலியை கழற்றி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், ஸ்ரீநித்யாவின் பெற்றோர்களுக்கு இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார்.
 
மகளின் நடவடிக்கையால் அவமானம் அடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி நேற்று அதிகாலை, பள்ளியில் படிக்கும் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு, கத்தாரி எனும் பகுதிக்கு சென்றனர். அங்கு தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அதன்பின் அவர்களும் அங்கிருந்த மரத்தில், ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டனர்.
 
அவர்கள் நான்கு பேரும் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், சேகரின் சட்டையில் மூன்று பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றினர். 
அந்த கடிதத்தில் தனது மூத்தமகள் ஸ்ரீநித்யாவின் தவறான நடத்தையால்  தாங்கள் தற்கொலை முடிவெடுத்ததாக எழுதி வைத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.