1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (03:18 IST)

திருநாவுக்கரசருக்கு எதிரான விவகாரத்தில் போலிக் கையெழுத்தா? - காங்கிரசில் புதிய சர்ச்சை

திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கக்கூடாது என்று அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்ற சிலரது கையெழுத்துகள் அவர்களுடையவை அல்ல என்று புகார் எழுந்துள்ளது.
 

 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலர் கையெழுத்திட்டு கட்சியின் தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்தக் கடிதத்தில் இருப்பது தங்கள் கையெழுத்தல்ல என சிலர் கூறுகின்றனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அடுத்த தலைவராக இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை.
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யாரை அறிவிப்பதென தேசிய மட்டத்தில் ஆலோசனை நடந்துவருவதாக கூறப்படும் நிலையில், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன் எனப் பலரது பெயர்கள் அந்தப் பதவிக்கு அடிபட்டன.
 
இந்த நிலையில், திருநாவுக்கரசரை புதிய தலைவராக நியமிக்கக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இதில் 39 மாவட்டத் தலைவர்களில் கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன.
 
ஆனால், தான் அதில் கையெழுத்திடவில்லையென கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம் என் விஜயசுந்தரம் தெரிவித்தார். கட்சித் தலைமை யாரை நியமித்தாலும் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
இந்தக் கடிதத்திற்கான ஆதரவைத் திரட்டிய சென்னை மாவட்டத் தலைவர்களில் ஒருவரான சிவராமன், திருச்சி மாவட்ட சுங்கச்சாவடிக்கு அருகில் வைத்து விஜயசுந்தரம் அதில் கையெழுத்திட்டதாகக் கூறினார்.
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனின் வருகைப் பதிவேட்டில் உள்ள கையெழுத்தை ஸ்கேன் செய்து அந்தக் கடிதத்தில் பயன்படுத்தியிருப்பதாக விஜயசுந்தரம் கூறுகிறார்.
 
மேலும் பலரும், தாங்கள் இதில் கையெழுத்திடவில்லையெனத் தெரிவித்திருப்பதாக விஜயசுந்தரம் கூறினார்.
 
இற்கிடையில் இன்னும் சில தினங்களில் புதிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பெயரை கட்சித் தலைமை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.