வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:41 IST)

சிபிஐ அதிகாரி..சைரன் கார்..பண மோசடி..பெண்களுடன் உல்லாசம்: போலீசாரை அதிர வைத்த போலி ஆசாமி

சிபிஐ அதிகாரி..சைரன் கார்..பண மோசடி..பெண்களுடன் உல்லாசம்: போலீசாரை அதிர வைத்த போலி ஆசாமி

சென்னையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறிக் கொண்டு பல பெண்களின் கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது.


 

 
சென்னை பெசண்ட்நகரில் வசித்து வரும் முருகன் என்பவரின் மகன் தாமோதரன்(27). இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் பெண்கள் இரவு நேரங்களில் குளிக்கும் போது, தாமோதரன் மறைந்திருந்து தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பெண்கள் விடுதி ஊழியர் காவேரி என்பவரிடம் புகார் தெரிவித்தனர். எனவே காவேரி இதுபற்றி தாமோதரனிடம் விசாரித்துள்ளார்.
 
ஆனால், தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறிய தாமோதரன், காவேரியை சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவேரி, திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இது குறித்து விசாரணை செய்ய,  தமோதரனின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அவர் அப்போது வீட்டில் இல்லை. எனவே, அவரின் பெற்றோரிடம், அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
 
இது கேள்விப்பட்டு தனது சைரைன் வைத்த காரில் காவல் நிலையம் சென்று, இன்ஸ்பெக்டர் முன் கால் மேல் கால் போட்டு பந்தாவாக சேரில் அமர்ந்துள்ளார் தாமோதரன். நீங்கள் யார் என்று இன்ஸ்பெக்டர் கேட்க ‘ நான் தாமோதரன். என் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள். நான் யார் தெரியுமா?. சிபிஐ பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுருகிறேன்’ என்று கூறி ஒரு ஐடி கார்டையும் காட்டியுள்ளார். 
 
சற்று யோசித்த இன்ஸ்பெக்டர், சிபிஐயில் நீங்கள் எந்த பிரிவில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் தாமோதரன். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களின் பாணியில் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.
 
பனிரெண்டாம் வகுப்பை கூட தாண்டாத தாமோதரன், தான் ஒரு சிபிஐ அதிகாரி என்று கூறிக்கொண்டு சென்னையில் வலம் வந்துள்ளார். ஒரு சிபிஐ ஐடி கார்டு, ஒரு வழக்கறிஞர் ஐடி கார்டு, பிரபலமான ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஐடி கார்டு என மூன்று ஐடி கார்டுகளை அவர் வைத்திருந்துள்ளார். சைரன் வைத்த காரில் வலம் வந்துள்ளார்.
 
மேலும், விடுதியில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். பணமும் பறித்துள்ளார். சில பெண்களை மிரட்டி உல்லாசமாகவும் இருந்துள்ளார். 
 
இரவு நேரங்களில் காரில் சென்று, சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம், தான் ஒரு சிபிஐ அதிகாரி எனக்கூறி, காரில் ஏறுங்கள்.. உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் அவர்களை நிர்வாண புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்களையும் வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவார். அதன்பின் அவர்களை தொடர்பு கொண்டு பணம் பறித்துள்ளார்.
 
மேலும், தான் ஒரு சிபிஐ அதிகாரி எனக்கூறி, பல நிறுவனங்களுக்கு சென்று, சோதனை என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.  தனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று கூறி அவரின் பெற்றோரையும் ஏமாற்றியுள்ளார்.
 
அவரிடமிருந்து இரண்டு போலீசார் சீருடை மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது.
 
எனவே அவர் எத்தனை பெண்களை அவர் சீரழித்தார், எந்தெந்த நிறுவனங்களில் பணம் பறித்தார், பெண்களை ஆபாச படம் எடுத்து இவர் மட்டும் வைத்திருந்தாரா அல்லது வேறு சிலருக்கும் அனுப்பியுள்ளாரா, இதில் இவரின் நண்பர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த விவகாரம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.