1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (12:36 IST)

அரசியல் கட்சிகளிடம் உணவு வாங்க கூடாது! – தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குசாவடி அலுவலர்கள் அரசியல் கட்சிகள் தரும் உணவை சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்குசாவடி அலுவலர்களாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமித்துள்ளது. இப்படியாக நியமிக்கப்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தலுக்கு முந்தைய தினமே வாக்குசாவடி உள்ள இடங்களுக்கு சென்று தங்கி தேர்தல் பணிகளை கவனிப்பர்.

இவர்களுக்கு முதல் நாள் இரவு மற்றும் தேர்தல் நாள் அன்று காலை, மதியம் உணவுகளுக்கான உணவுப்படி தொகையை தேர்தல் ஆணையம் வழங்கி விடும். எனினும் பல வாக்குசாவடி பகுதிகளில் அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகள் உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் எந்த சார்புமற்று நடப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குசாவடி அலுவலர்கள் அரசியல் கட்சிகள் தரும் உணவை சாப்பிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவரவர்க்கு வழங்கப்பட்டுள்ள உணவுப்படி தொகையில் மட்டுமே உணவு வாங்கி சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.