வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 23 ஜூலை 2015 (00:32 IST)

போதையில் சரிந்த செங்கோட்டை பள்ளி மாணவர் - ரத்தக் கண்ணீர் வடித்த பெற்றோர்

கரூர் மற்றும் கோவையை அடுத்து செங்கோட்டையில் மாணவர் ஒருவர் போதையில் நடு ரோட்டில் கீழே விழுந்து கிடந்த சம்பவம் பொது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

 
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாவது படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்புக்கு லீவு போட்டுவிட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து, தாங்கள் வாங்கி வந்த மதுவை மெல்லமெல்ல ரசித்து ருசித்து அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், டாஸ்மாக் கடைக்கு மீண்டும் சென்று மது வாங்கி வந்து குடித்துள்ளனர்.
 
இதில், ஒரு மாணவனுக்கு போதை அதிக அளவு ஏறியதால், அவர் தன்னை மறந்து உளற ஆம்பித்துள்ளார். நடக்க முடியாமல் தள்ளாடியுள்ளார். இதனால், அந்த மாணவனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மற்ற மாணவர்கள் சென்று விட்டனர். ஒரு வழியாக அந்த மாணவன் தனது வீட்டிற்கு செல்ல முயன்று, நகர பகுதிக்கு வந்த போது, சாலையில் கீழே சரிந்துவிழுந்தான்.
 
இதனைக் கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அந்த மாணவனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவன் அனுப்பிவைக்கப்பட்டார்.
 
இந்த தகவல், அறிந்து அந்த மாணவனின் பெற்றோர் ஓடி வந்து அந்த மாணவனை மருத்துவ மனையில் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்த சம்பவம் பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடையவைத்தது.